ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

யானை எய்த படலம்!

ADVERTISEMENTS









விக்ரமப்பாண்டியனின் ஆட்சியில் தர்மம் தழைத்தது. மக்கள் இல்லை என்ற சொல்லையே அறியாமல் வாழ்ந்தனர். சைவத்தை வளர்த்த மன்னன் பிற மதங்களின் வளர்ச்சியை தடை செய்து விட்டான். இதனால் எங்கும் தேவாரம் ஒலித்தது. தர்மமும், பக்திமார்க்கமும் உள்ள நாட்டை யாரால் அசைக்க முடியும்? வீரத்தின் விளைநிலமான விக்ரமன் பல தேசங்களுக்கும் படையெடுத்துச் சென்றான். அந்த மன்னர்களையெல்லாம் தோற்கடித் தான். அனைத்து தேச மன்னர்களும் பாண்டியநாட்டுக்கு கப்பம் கட்ட வேண்டுமென உத்தரவு பிறப்பித்து வந்தான். விக்கிரமனால் பாதிக்கப்பட்ட மன்னன் ஒருவன் காஞ்சிபுரத்தில் இருந்தான். அவனால் தனது தோல்வியைத் தாங்கவே முடியவில்லை. எப்படியாவது விக்ரமனைக் கொன்றே தீருவதென சபதமெடுத்தான். வீரத்தால் அவனைச் சாய்ப்பது கடினம் என்பதால், மதக்கலவரம் மூலமாக அவனைச் சாய்த்து விட திட்டம் போட்டான். அக்காலத்தில், சைவ சமயத்தினருக்கும், சமண சமயத்தினருக்கும் தீராத சண்டை நடக்கும். சமணர்கள் மந்திர தந்திரங் களில் கைதேர்ந்தவர்கள். மந்திரம், பில்லி, சூன்யம் மூலமாக விக்ரமனை அழித்து விட காஞ்சிமன்னன் முடிவெடுத்து, எட்டு மலைகளில் வசித்து வந்த சமண மத முனிவர்கள் எட்டாயிரம் பேரை காஞ்சிபுரத்துக்கு வரவழைத்தான். சமணர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பெரும் வரவேற்பு நல்கிய மன்னன், தன் எண்ணத்தை அவர்களிடம் வஞ்சகமாக வெளியிட்டான்.

சமணர்களே! மதுரையில் பாண்டியன் சைவமதத்தை தவிர வேறெதுவும் வளர விடாமல் செய்கிறான். இப்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தேசத்து மன்னர்களும் அவனுக்கு அடிமையாகி விட்டார்கள். எல்லாருமே சைவத்தைப் பின்பற்றும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இப்படியே போனால், உங்களது சமண மதம் அழிந்து விடும். நான் சமணத்தைப் பின்பற்ற விரும்புகிறேன். நம் மதம் வளர வேண்டுமானால் சைவம் அழிய வேண்டும். சைவம் அழிய வேண்டுமானால், விக்ரமன் மரணமடைய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வசியம் முதலான மந்திர சக்திகளைப் பயன் படுத்த வேண்டும், என்றான். சமணர்கள் கொதித்தனர்.எங்கள் மதம் வளர்வதற்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். மேலும் சைவர்கள் எங்களுக்கு நிரந்தர எதிரிகள். மன்னா! கவலைப்படாதே! பூவுலகமெங்கும் இனி உனது ஆட்சியே நடக்கும். சமணம் தழைக்கும். விக்ரமனைக் கொல்ல நாங்கள் நேரில் செல்லப்போவதில்லை. இங்கேயே யாகம் ஒன்றைத் தொடங்கப் போகிறோம். இந்த யாகத்தின் முடிவில், நாங்கள் அனுப்பும் சக்தியால் விக்ரமன் அழிந்து போவான், என்றனர். காஞ்சிமன்னன் தன் திட்டம் பலித்தது கண்டு எகத்தாளமாகச் சிரித்தான். யாகம் துவங்கியது. எட்டி என்னும் விஷமரத்தின் சுள்ளிகளை யாக குண்டத்தில் சமணர்கள் இட்டனர். மேலும் விஷ ஜந்துக்களின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்ட கொழுப்பை யாக குண்டத்தில் எண்ணெயாக ஊற்றினர். ஹோம குண்டத்தில் போடப்பட்ட அனைத்து வஸ்துக்களுமே விஷக்காற்றை சிந்துபவை தான்! அதில் இருந்து எழுந்த புகை சுற்றுப்புறத்தை மாசுபடுத்தியது. நதிகளை வற்றச் செய்தது.

சில நாட்களில் அந்த ஹோம குண்டத்தில் இருந்து பயங்கரபிளிறலுடன் வழக்கத்தை விட கருமை நிறம் அதிகமான யானை ஒன்று வெளிப்பட்டது. கோபம் கொண்ட அந்த யானையை மயில்தோகையால் தடவிக்கொடுத்த சமணர்கள்,ஏ மாபெரும் சக்தியே! நீ நேரே மதுரை செல். உன் உக்கிரத்தை அந்த நகரத்தின் மீது காட்டு. அந்நாட்டு அரண்மனைக்குள் புகுந்து அங்கிருப்போரை துவம்சம் செய். விக்ரமபாண்டியனைக் கொன்று விடு. இது நாங்கள் உனக்கிடும் கட்டளை, என்றனர். யானை வேகமாக தலையை அசைத்தது. அதன் உக்ரம்கடுமையாக இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தன் உருவத்தை மேலும் மேலும் பெரிதாக்கியது. அதன் கால்கள் வானமளவுக்கு வளர்ந்தன. இரண்டே எட்டில் அது மதுரை நகர எல்லையை அடைந்து விட்டது. மதுரை நகரின் எல்லையில் இருந்த தோட்டங்களுக்குள் புகுந்து அவற்றை அழித்தது. வயல்சூழ்ந்த பகுதிகளுக்குள் புகுந்து பயிர் பச்சைகளை மிதித்து அழித்தது. அருகில் சென்று விரட்ட முயன்றவர்களை மிதித்துக் கொன்றது. மதம் பிடித்த அந்த யானையை அடக்க வழி தெரியாமல் மக்கள் மன்னனிடம் ஓடினர். மக்கள் பரபரப்புடன் அரண்மனை நோக்கி ஓடி வருகிறார்கள் என்பதை சேவகர்கள் மூலம் முன்கூட்டியே அறிந்த மன்னன் விக்கிரமபாண்டியன் உப்பரிகையில் வந்து நின்றான். மக்கள் அஞ்சும் முகங்களுடன் அவன் முன்னால் வந்து நின்றனர். மக்களில் ஒருவர், பாண்டிய மாமன்னரே! நம் மதுரை மாநருக்குள் இதுவரை யாருமே பார்த்தறியாத யானை ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அது வானத்தை எட்டுமளவு உயரமுடையதாக இருக்கிறது. இதுவரை இப்படி ஒரு யானையை நாங்கள் கண்டதே இல்லை. அதன் சிறுவிழிகளில் நெருப்பு பொறி பறக்கிறது. அது பயிர்பச்சைகளை அழிக்கிறது. துரத்தச் சென்ற எங்களில் பலர் அதன் கோபத்திற்கு ஆளாகி இறந்துவிட்டார்கள்.

தாங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும், என்றனர். இதுகேட்டு மன்னன் ஆச்சரியமும் அச்சமும் அடைந்தான். வானமளவு உயர்ந்த யானையா? அப்படியானால் அதன் வலிமை அபரிமிதமாக இருக்குமே! இதைக் கொல்ல வல்லவர் எம்பெருமானாகிய சுந்தரேசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? எனவே, மதுரை நகருக்குள் அது நுழையும் முன்பே அதைக் கொன்று விடும்படி நாம் இறைவனையே பிரார்த்திக்க வேண்டும். வாருங்கள்! நம் சோமசுந்தரப் பெருமானைச் சரணடைவோம், என்றான். மக்களும் மன்னன் பின்னால் ஓடினர். அனைவரும் அன்னை மீனாட்சியிடமும், சொக்கநாதரிடமும் மனமுருக வேண்டினர். அப்போது அசரீரி ஒலித்தது. விக்கிரமபாண்டியா! கவலைப் படாதே! பாண்டியநாடு என் தேசம். இங்கு மக்கள் கஷ்டப்படுவதை நான் சகிக்கமாட்டேன். நீ நம் ஊரின் வடக்கு எல்லையில் பதினாறு கால் மண்டபம் ஒன்றைக் கட்டு. நான் வேடனாக வேடம் தரித்து அங்கு மறைந்து கொள்வேன். அங்கிருந்தபடியே யானையை  கொல்வேன், என்றான். விக்கிரமபாண்டியன் இறைவன் முன்னால் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தான். சோமசுந்தரரே பாதுகாப்புக்கு வருவதாகச் சொன்ன பிறகு என்ன பயம்? மாலை நேரமாகி விட்டாலும் மக்களுடன் அவன் வடக்கு எல்லைக்கு விரைந்தான். கற்கள் கொண்டு வரப்பட்டன. மண்டபப் பணி ஆயிரக்கணக்கோருடன் விடிய விடிய நடந்தது. விடிவதற்குள் வேகமாக மண்டபப்பணி முடிந்து விட்டது. மறுநாள் மக்கள் ஆவலுடன் காத்திருந்தார். சோமசுந்தரக் கடவுள் தன் புலித்தோல் ஆடைக்கு பதிலாக சிவப்பு பட்டு வஸ்திரம் அணிந்து, வேல், வில், அம்பு தாங்கி யானையை அழிக்கப் புறப்பட்டார்.

அவர் பதினாறு கால் மண்டபத்தில் ஏறியதும், மக்கள் அவரது திவ்ய தரிசனத்தைக் கண்டனர். விக்கிரமபாண்டியன் அவரது பாதங்களில் விழுந்து சேவித்தான். மக்களையும் மன்னனையும் ஒதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு சோமசுந்தரர் நரசிம்ம பாணம் ஒன்றை தொடுத்தார். அது மின்னல் வேகத்தில் சென்று யானையின் உடலில் தைத்தது. ஓவென்ற பேரிரைச்சலுடன் வானுயர்ந்து நின்ற அந்த யானை ரத்தம் சிந்த தரையில் சாய்ந்து உயிர்விட்டது. அதை ஏவிய சமணர்கள் சிலரும், காஞ்சி மன்னனின் படையினரையும் பாண்டிய வீரர்கள் துரத்தினர். பலரை விரட்டிப்பிடித்து கொன்றனர். தப்பி ஓடியவர்கள் வெகு சிலர் மட்டுமே! விழுந்த யானை பெரும் பாறையாக மாறியது. மதுரை நகர எல்லைக்குள் நுழையும் முன் ஒத்தக்கடை என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் இப்போதும் யானை படுத்திருப்பது போன்ற பெரும் மலையைக் காணலாம். இப்போது அதை யானைமலை என்கிறார்கள். சிவன் விடுத்த நரசிம்ம பாணம் விழுந்த இடத்தில் பூமியில் இருந்தே நரசிம்மர் தோன்றினார். அவர் யானைமலையின் கீழே அமர்ந்தார். இப்போதும் யானைமலை அடிவாரத்தில் இந்தக் கோயில் இருக்கிறது. மதுரையின் பிரபல  நரசிம்மர் கோயில் இது. அந்த பதினாறு கால் மண்டபத்தில் சிவபெருமானை நிரந்தரமாகத் தங்கும்படி விக்கிரமபாண்டியன் கேட்டுக் கொண்டான். அவரும் அதற்கு சம்மதித்தார். இவ்வாறாக காஞ்சி மன்னனால் ஏற்பட்ட துன்பம் நீங்கி மக்கள் இன்பமடைந்தனர். காலம் ஓடியது. விக்கிரமபாண்டியனுக்கு ராஜசேகரன் என்னும் மகன் பிறந்தான்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS